"முருகப் பெருமானின் கேள்விக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்"

பரமசிவனால் ஒன்றும் பேச இயலவில்லை."சரி சரி அனைவரும் வாருங்கள்.சபையில் அமர்ந்து பேசலாம்"என்றார்.அனைவரும் சபைக்குச் சென்று தத்தம் இருக்கைகளில் அமர்ந்தனர்.

முருகப் பெருமான் எழுந்தார். அம்மையையும் அப்பனையும் பார்த்துப் பணிவுடன் வணங்கிப் பின் பேச ஆரம்பித்தார்.

"ஐயனே.இன்று காலையில் ஒரு கணக்குப் போட்டேனே. விடை காண மாலை வரை நேரம் தந்தேன்.அம்மை அப்பன் இருவரும் விடை கண்டாயிற்றா?"

"ஹூம்.பலவாறாக யோசித்து யோசித்து ஒரு வழியாக விடை கண்டிருக்கிறேன் முருகா."

சரி.அம்மையே.நீங்கள்...?"

"சரவணா.மூவுலகையும் ஆட்டிப் படைக்கும் எங்களை வைத்தே இன்று முழுதும் நீ விளையாடி விட்டாய்.நானும் அதி தீவிரமாக யோசித்து விடை கண்டுபிடித்திருக்கிறேன்."

"அதென்ன.இருவரும் ஆளுக்கொரு மூலையில் போய் இருந்தீர்களே.ஏன்?"

"இருவரும் சேர்ந்துதான் யோசிக்க ஆரம்பித்தோம்.கருத்து வேறுபாடு வந்து விட்டது.நீ வேற, ஒரு நபர் ஒரு விடையைத் தான் சொல்ல வேண்டும்,இரண்டாவது விடை சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டாயா.எனவே ஆளுக்கொரு விடை காணலாமே என்பதும் ஒரு காரணம்."

அப்போது விநாயகப் பெருமான்,வீரபத்திரர் ஆகியோரும் வந்து அம்மையையும் அப்பனையும் வணங்கிப் பின் தத்தம் இருக்கைகளில் அமர்ந்தனர்.

முருகப் பெருமான் அவர்கள் இருவரையும் பணிவுடன் வணங்கினார்.

"அண்ணார்களே.நீங்கள் இருவரும் விடை கண்டீர்களா?"

"ஓ.நாங்களும் ஆளுக்கொரு விடையாகக் கண்டிருக்கிறோம்.சொல்லவா?"

இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரனால் பொறுக்க முடியவில்லை.

"இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும் முருகப் பெருமானே.அதென்ன அவ்வளவு சிக்கலான கணக்கு?கணக்கு என்னவென்று சொன்னால் நானும் பதில் சொல்கிறேனே!என்னதான் உங்கள் அனைவரது அறிவிற்கும் அனுபவத்திற்கும் முன்னால் நான் நிற்கக் கூட முடியாது என்றாலும் நானும்...நானும் கூட உங்களில் ஒருவன்தானே.என் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வைத்துத் தானே என்னை தேவேந்திரனாகவே தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?நான் கேட்டது தவறாக இருந்தால் அருள்கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டும்"

இவ்வாறு தேவேந்திரன் முறையிட்டதைக் கேட்டதும் முருகப் பெருமான் மகிழ்ந்து போனார்.பரமசிவனும்,பார்வதியும் கூடத் தலைகளை அசைத்துத் தங்களது ஒப்புதலைத் தெரிவித்தனர்.

முருகப் பெருமான் நாரதரைப் பார்த்தார்.

"என்ன நாரதரே.நீங்களும் இந்த ஆட்டத்தில் பங்கு கொள்கிறீர்களா?"

"எனக்கு அந்த அருகதை இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.இருந்தாலும் கேள்வியைக் கேளுங்கள்.தெரிந்தால் விடை சொல்கிறேன்."

"சரி.ஆனால் அம்மனும் அப்பனும் ஒரு பகற்பொழுது முழுதும் அவகாசம் கேட்டார்கள்.உங்களுக்கு அப்படியெல்லாம் அவகாசம் தர இயலாதே."

"பரவாயில்லை முருகப் பெருமானே.முடிந்தால் சொல்கிறோம்.இல்லை என்றால் வாயை மூடிக் கொள்கிறோம்."

"சரி.கேள்வியைக் கேட்பதற்குமுன் சில நிபந்தனைகளைச் சொல்கிறேன்.அதற்குக் கட்டுப்பட்டுத்தான் விடை சொல்ல வேண்டும்.கேள்வி பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தோன்றலாம்.ஆனால் அதில் ஒரு மிகப் பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது.எனவே மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்து யோசித்து விடை கூறுங்கள்.அடுத்து விடைக்கான காரணமும் கூற வேண்டும்.ஒருவர் ஒரு விடை மட்டுமே கூறலாம்.இரண்டாவது விடை கூறக் கூடாது.இவ்வளவு தான்.சரி.கேள்வியைக் கேட்கட்டுமா?யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்"

சரி என்று நாரதரும் தேவேந்திரனும் தலை அசைத்தனர்.

முருகப் பெருமான் கேள்வியைக் கேட்டார்.

"ஒன்றும் ஒன்றும் எவ்வளவு?"

2 comments:

Anonymous said...

ஒன்று

Subramanian said...

இல்லிங்க ரவி ரெண்டு தானேங்க.நல்லா ரோசனை பண்ணிப் பாருங்க