தேவேந்திரனின் மனக்குறை தொடர்ச்சி

நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை.

"கெழவியா?யாரைச் சொல்கிறாய்?"

"எல்லாம் அந்த இந்திராணியே தான்."

நாரதருக்கு ஒரே அதிர்ச்சி.

"என்ன தேவேந்திரா?என்ன பிதற்றுகிறாய்?"

"ஆமாம் நாரதரே."

"அப்படியெல்லாம் தேவலோக மாதாவைத் தூற்றக்கூடாது."

"உங்களுக்கு வேண்டுமென்றால் மாதா என்று வைத்துக் கொள்ளுங்கள்.என்னைப் பொறுத்தவரைக்கும் அவள் வங்கிழடாகி எத்தனையோ யுகங்களாகிவிட்டன."

நாரதர் ஒன்றும் பேசாமல் தேவேந்திரனையே வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தார்.

தேவேந்திரன் மேலும் தொடர்ந்தான்.

"நான் உங்களைக் கேட்கிறேன்.எனக்கு ஆயுள் எவ்வளவு?"

"உனக்கு ஆயுள் பலப் பல யுகங்களாயிற்றே!"

"அதற்குப் பின்?"

"உன் காலத்திற்குப் பின் பிரம்மத்தை முற்றிலும் அறிந்தவர்களில் முதன்மையான இன்னொருவரைத் தேர்ந்தெடுப்போம்."

"அப்படி என்றால் நான் எத்தனையாவது இந்திரன்?"

"அது கணக்கில் அடங்காது தேவேந்திரா.உனக்கு முன் எத்தனையோ இந்திரர்கள் இருந்திருக்கிறார்கள்.
உனக்குப் பின்பும் எத்தனையோ இந்திரர்கள் வருவார்கள்."

"அப்படின்னா இந்திராணி?"

நாரதருக்குப் புரியவில்லை.

"என்ன கேட்கிறாய் இந்திரா?.."

"இல்லை.இப்ப இருக்கிற இந்திராணி எத்தனையாவது இந்திராணி?"

"இந்திராணி மாறமாட்டாள் தேவேந்திரா.தேவேந்திரர்கள் தான் மாறுவார்கள்.இந்திராணி ஒருத்தர் தான்."

"அதைத் தான் ஏன் என்று கேட்கிறேன்.வேறு இந்திராணியைத் தேர்ந்தெடுப்பதில் என்ன சிக்கல்?"

"யுகம் யுகமாக இருந்துவரும் சனாதன தர்மத்தை மீறக் கூடாது தேவேந்திரா."

"தவறு நாரதரே.மாறுவது ஒன்று தான் மாறாமல் இருக்கும் நியதி.இந்த நியதியை மீறி யாருமே இல்லை."

பிரச்சனை தன்னை மீறிப் போவதை உணர்ந்தார் நாரதர்.

"உன் வாதத்திற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை தேவேந்திரா.அது இருக்கட்டும்.இப்போது இந்திராணியுடன் என்ன பிரச்சனை?"

"ஒரு பிரச்சனையும் இல்லை.நாளாக நாளாக இந்திராணியின் முகம் ரொம்பவே போரடிக்கிறது.எனக்கு முன்னர் எத்தனை
இந்திரன்களுடன் இவள் வாழ்ந்திருக்கிறாள் என்பதை நினைக்கும்போது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது.
வர வர இவள் போக்கே சரி இல்லை.காலையில் எழுந்ததிலிருந்து இரவு பள்ளியறைக்குச் செல்லும் வரை எனது அன்றாடப் பணிகளில் குறுக்கிடுகிறாள்.கேட்டால்,உங்களுக்கு முன் இருந்த தேவேந்திரன் இப்படித்தான் செய்தார்.நீங்கள் அதற்கு முரணாகச் செய்கிறீர்கள் என்று மறுப்புத் தெரிவிக்கிறாள்.இப்படி எடுத்ததற்கெல்லாம் பேசுவது என்னமோ வர வர ஜாஸ்தியாகிக் கொண்டே வருகிறது."

"இவைகளைக் கூட நான் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.பழைய இந்திரன் காலமாகி அடுத்து நான் வந்து ஒரு யுகம் தான் ஆகிறது.அதற்குள் பள்ளியறையில் அவள் படுத்துகிற பாடு இருக்கிறதே,அப்பப்பா!சகிக்கவில்லை."'

அட!இதென்ன எதிர்பார்த்ததற்கும் மேலாக சுவாரஸ்யமாகப் போகிறதே!!நாரதரால் ஆவலை அடக்க முடியவில்லை.

"என்ன என்ன தேவேந்திரா.சீக்கிரம் சொல்."

"அடுத்தவர்களின் குடும்ப விஷயத்தைக் கிண்டுவதே உங்களுக்கு வேலையாகப் போய்விட்டது.அதுவும் பள்ளியறை விவகாரமென்றால்......."


"அதெல்லாம் ஒன்றுமில்லை தேவேந்திரா.நீ சொல்ல வந்ததைச் சொல்."

"பகலில் எல்லாம் ஒரு வேலையும் இல்லை என்று சொன்னேன் அல்லவா.இரவில் தூக்கமே வருவதில்லை.அதனால் இரண்டு மூன்று குடுவை சோமபானம் அருந்துகிறேன்.நாளாவட்டத்தில் ஏழெட்டு குடுவை சோமபானம் அருந்தினால் தான் தூக்கமே வருகிறது.தூங்கும் போது குறட்டை விடுகிறேனாம்.அது அவளின் தூக்கத்தைக் கெடுத்து விடுகிறதாம்.உடனே தட்டி எழுப்பி விடுகிறாள்.குறட்டை விடாமல் தூங்குங்கள்.முன்பிருந்த இந்திரன்களெல்லாம் ஒருத்தன் கூட குறட்டை விட்டதில்லையாம்.
நான் மட்டும் விடுகிறேனாம்.எல்லாம் நக்கல்.நான் என்ன செய்வேன்?ஹும்.தேவேந்திரனாக இருந்தும் ஒரு குறட்டை கூட விட முடியவில்லை."

நாரதருக்கு சப்பென்று ஆகி விட்டது.

"அவ்வளவு தானா இந்திரா?"

தேவேந்திரனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.விட்டால் அழுது விடுவான் போலிருந்தது.
பரிதாபமாக நாரதரைப் பார்த்தான்.

"சரி.என்ன செய்யப் போகிறாய்?"

"எனக்கு தேவேந்திரன் பதவி வேண்டாம்.தேவாதி தேவர்களுடன் ஒருவனாக இருந்துவிட்டுப் போகிறேன்.நீங்கள் வேறு ஒருவரைத் தேவேந்திரனாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.என் கோரிக்கையை முறையிடத்தான் இன்று பாற்கடலுக்கு வந்திருக்கிறேன்.நீங்கள் தான் விஷ்ணுவின் பரம பக்தராயிற்றே.என் கோரிக்கையைஅந்தப் பரந்தாமனிடம் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன்."

நாரதருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.இதுவரைக்கும் அவராகவே கலகம் உண்டுபண்ணுவதாகக் கெட்ட பேர் வேறு.இப்போது இந்தப் பிரச்சனைக்குள் தலையை விட்டால் கேட்கவே வேண்டாம்.

அதற்குள் வெளியே வந்த துவாரபாலகன் ஒருவன்"உங்கள் இருவரையும் உள்ளே அனுப்பச் சொல்லி உத்தரவு. உள்ளே போங்கள்" என்றான். இருவரும் பரந்தாமன் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடலுக்குள் நுழைந்தனர்.

2 comments:

யாத்ரீகன் said...

:-))))) sooper , interesting-ah iruku indha series.. continue panunga..

Subramanian said...

வாங்க யாத்திரீகன்.வருகைக்கு நன்றி